கொவிட்-19: தென்கொரியாவில் பாதிப்பு எண்ணிக்கை 3,150; ஒருவருக்கு மீண்டும் தொற்றியது
கொவிட்-19 தொற்றால் தென்கொரியா மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அங்கு 813 பேர் புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,150 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் தென்கொரியாவில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் வெளியே செல்லவேண்டாம் என்று பொதுமக்களை அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
“இந்த வாரயிறுதியில் சமய ஒன்றுகூடல்கள், பேரணிகள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே இருங்கள். வெளியே செல்வதையும் மற்றவர்களைச் சந்திப்பதையும் தவிர்த்துவிடுங்கள்,” என்று தென்கொரியாவின் சுகாதார துணை அமைச்சர் கிம் காங் லிப் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்த 73 வயது மூதாட்டி மீண்டும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய நிலை தென்கொரியாவில் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது. அவரது நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்திருப்பதால் அவருக்கு மீண்டும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போன்ற நிலை சீனாவில் 10 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர் டேகு நகரத்தைச் சேர்ந்தவர்கள். அந்நகரில் மூன்று பெண்களும் ஓர் ஆடவரும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக தென்கொரியாவில் இதுவரை 17 பேர் மாண்டனர். அவர்கள் அனைவரும் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள்.
#தென்கொரியா #கொரோனா