முதல் மரணம்: பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு, வாஷிங்டனில் அவசரநிலை
வாஷிங்டன்: கொரோனா கிருமிக்கு முதல் நபர் பலியானதைத் தொடர்ந்து அமெரிக்கா அதன் பயணத் தடைகளை விரிவுபடுத்தி உள்ளது. 50களின் வயதுடைய ஆடவர் உடல்நிலை மோசமடைந்து மாண்டதாகவும் அண்மையில் அவர் எந்த ஒரு நாட்டுக்கும் செல்லவில்லை அல்லது கொரோனா கிருமி பாதிக்கப்பட்டவரோடு தொடர்பில் இல்லை என்றும் சியாட்டலில் உள்ள கிங் கவுண்டியின் பொது சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, மாண்டவர் பெண் என்று அதிபர் டிரம்ப் செய்தியாளர் கூட்டத்தில் கூறியது தவறாகிவிட்டது. கிருமியால் மரணம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து வாஷிங்டனில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளை ரத்து செய்வது குறித்தும் பள்ளிகளை மூடுவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக ஆளுநர் ஜே இன்ஸ்லீ கூறினார்.அமெரிக்காவில் 68 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 47 பேர் சீனாவின் வூஹான் நகரிலிருந்தும் ஜப்பானின் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்தும் வெளியேற்றப்பட்டு அழைத்துவரப்பட்டவர்கள்.
அமெரிக்கர்களுக்கான ஆபத்து குறைவு என்றும் பொதுமக்கள் பீதியடையாமல் தங்களது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துமாறும் அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“புதிதாக கிருமித்தொற்றுக்கு அமெரிக்கர்கள் ஆளாகக்கூடும். ஆயினும் உடல் திடகாத்திரமானவர்கள் முழுமையாகத் தேறிவிடுவர்,” என்றார் அவர். இந்நிலையில், கடந்த 14 நாட்களில் ஈரானுக்குச் சென்ற வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்படும் என்று துணை அதிபர் மைக் பென்ஸ் கூறினார். அத்துடன் தென்கொரியா, இத்தாலி ஆகி யவற்றின் சில நகரங்களுக்குச் செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை கூறியுள்ளது.