தென்கொரியா, இத்தாலி, ஈரானில் இருந்து வருவோருக்குத் தடை
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை சிங்கப்பூர் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கடந்த 14 நாட்களில் தென்கொரியா, வடக்கு இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்தவர்கள் சிங்கப்பூருக்குள் நுழையவும் அல்லது சிங்கப்பூர் வழியாகச் செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த இரு வார காலத்தில் அந்நாடுகளுக்குச் சென்றிருந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் ஆகியோர் அனுமதிக்கப்படுவர் என்றாலும் அவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.
அத்துடன், கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வரும் தென்கொரியா, வடக்கு இத்தாலி, ஈரான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு சிங்கப்பூரர்களிடம் வலியுறுத்தியுள்ளது.
நாளை (மார்ச் 4) இரவு 11.59 மணியில் இருந்து, காய்ச்சல் அல்லது மூச்சுப் பிரச்சினையுடன் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைவரும் சோதனைச்சாவடிகளில் ‘கொவிட்-19’ சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
சோதனைக்குப் பின் சிங்கப்பூரில் நடமாட அவர்கள் அனுமதிக்கப்படுவர். இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்றவர்களுடன் கலந்துறவாட வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தப்படுவர்.
மூன்று முதல் ஆறு மணி நேரத்திற்குள் சோதனை முடிவுகள் தெரிய வரும். அம்முடிவுகள் சம்பந்தப்பட்ட பயணிகளிடம் தெரிவிக்கப்படும்.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டிருப்போர் அவசர மருத்துவ வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
குறுகியகால விசாவில் வருவோர் சோதனைக்கு உட்பட மறுத்தால் அவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல, சோதனைக்கு உட்பட மறுக்கும் நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரின் அனுமதியும் சிறப்புரிமைகளும் ரத்து செய்யப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.
சிங்கப்பூரர்கள் உட்பட, சோதனைக்கு உட்பட மறுக்கும் பயணிகள் தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் தண்டனையை எதிர்நோக்குவர்.
இப்படி, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த ஆன முயற்சிகள் அனைத்தையும் சிங்கப்பூர் எடுத்து வந்தாலும், “கிருமித்தொற்று அதிகரித்தால் அதை எதிர்கொள்ள நாம் மனத்தளவில் ஆயத்தமாக இருக்கவேண்டும்,” என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டார்.
#கொரோனா #சிங்கப்பூர் #தமிழ்முரசு