கொவிட்-19: கலிஃபோர்னியாவில் அவசரகால நிலை அறிவிப்பு; அமெரிக்காவில் 11 பேர் உயிரிழப்பு
உலக அளவில் பரவிவரும் கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாநில ஆளுநர் அங்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று (மார்ச் 4) மேலும் இருவர் இந்தக் கிருமித்தொற்றால் மரணமடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து அந்நாட்டில் இதுவரை 11 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலிஃபோர்னியாவில் இந்தக் கிருமித்தொற்றுக்கு முதலாவது நபராக மரணமடைந்தவர் பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளைக் கொண்டிருந்த மூதாட்டி என்று கூறப்படுகிறது.
அமெரிக்க மாநிலமான வாஷிங்டனில் 10 பேர் மரணமுற்ற நிலையில் அந்த மாநிலத்தைத் தாண்டி ஒருவர் மரணமடைந்திருப்பது கலிஃபோர்னியாவில்தான் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
கலிஃபோர்னியவின் பிளேசர் என்ற பகுதியிலுள்ள பொது சுகாதார இலாகா வெளியிட்ட அறிக்கை, இறந்த மூதாட்டியிடம் கொரோனா கிருமித்தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் அநேகமாக பிப்ரவரி 11 அல்லது 12ஆம் தேதியில் பிரின்சஸ் என்ற உல்லாச கப்பலில் மெக்ஸிகோவிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ செல்லும் வழியில் இந்தக் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்றும் தெரிவித்தது.
"அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது குறித்த விசாரணையில் அவர் உல்லாசக் கப்பலில் இருந்து வந்தபின், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுவரப்படுவதற்கு முன், மிகக் குறைந்த அளவிலான சமூகத் தொடர்பிலேயே இருந்துள்ளார்," என்று அந்த அறிக்கை விளக்கியது.
கலிஃபோர்னியாவின் பிளேசர் பகுதியில் கிருமித்தொற்று பாதிப்புக்கு ஆளானதாக உறுதி செய்யப்பட்ட இரண்டாவது நபர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சியேட்டல் பகுதியில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 27லிருந்து 39க்கு உயர்ந்துள்ளதாக வாஷிங்டன் மாநில பொது சுகாதார இலாகா கூறுகிறது. அங்கு ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது.
மற்றொரு நிலவரத்தில் நியூயார்க் மாநலித்தில் புதன்கிழமையன்று கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
#கொவிட்-19 #கொரோனா #அமெரிக்கா #கலிஃபோர்னியா #தமிழ்முரசு