பூட்டானில் முதல் கிருமித்தொற்று; 8 இந்தியர் உட்பட 90 பேருக்கு தடைகாப்பு, சுற்றுப்பயணிகளுக்குத் தடை
பூட்டானில் கொரோனா கிருமித்தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இன்று (மார்ச் 6) உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த இரண்டு வாரங்களுக்கு சுற்றுப் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது.
சுற்றுலாத் துறையைப் பெரிதும் நம்பியுள்ள பூட்டானின் பொருளியல், இந்த அறிவிப்பால், பாதிப்படையக்கூடும்.
அங்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நபரான அவர், மார்ச் 2ஆம் தேதி இந்தியாவிலிருந்து பூட்டான் சென்ற 79 வயது அமெரிக்க சுற்றுப்பயணி.
நேற்று அவர் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பூட்டன் பிரதமர் லோடே ஷெரிங் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
பூட்டான் தலைநகர் திம்புவில் உள்ள மருத்துவமனையில் அந்த ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவருடன் தொடர்பில் இருந்த 90 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் யாருக்கும் இதுவரை கிருமித்தொற்று அறிகுறிகள் தென்படவில்லை.
பூட்டானுக்கு அவர் பயணம் செய்த விமானத்தில் உடன் பயணித்த எட்டு இந்தியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ள பூட்டான் அரசு, அனைத்துலக மாநாடுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றையும் தள்ளி வைத்துள்ளது. திம்பு உட்பட மூன்று பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று திரும்பிய இந்தியர் ஒருவருக்கு புதுடெல்லியில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆகியுள்ளது.
அனைத்துலக அளவில் 98,000க்கும் மேற்பட்டோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
#கொரோனா #கொவிட்-19 #பூட்டான் #அமெரிக்கர் #தமிழ்முரசு