தென்கொரியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,400ஐ எட்டினாலும் புதிய சம்பவங்கள் குறைந்தன
தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (ஜனவரி 9) 7,400ஐ நெருங்கிவிட்டது. எனினும், புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது.
ஆனால், கிருமி பரவல் இடங்களாக புதிய பகுதிகள் அடையாளம் காணப்படுகின்றனவா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புநிலையில் உள்ளனர்.
தென்கொரியாவில் புதிதாக 248 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,382ஐ எட்டியதாக கொரிய நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.
புதிய சம்பவங்களில் 190 சம்பவங்கள் அந்நாட்டின் டேகு நகரிலும் 26 சம்பவங்கள் நார்த் ஜியோங்சாங் பகுதியிலும் பதிவாகின. புதிதாக பதிவாகும் சம்பவங்களில் பெரும்பாலானவை இவ்விரு பகுதிகளில்தான் உறுதிப்படுத்தப்படுகின்றன என்றாலும், மற்ற நகரங்களிலும் ஒருசில கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26ஆம் தேதியைத் தொடர்ந்து, ஒரே நாளில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது தென்கொரியாவில் இதுவே முதன்முறை. கடந்த வாரம் தென்கொரியாவில் நாள் ஒன்றுக்கு 300 முதல் 520 சம்பவங்கள் வரை பதிவாகியிருந்தன.
தென்கொரியாவின் டேகு நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கிருமி பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஏறத்தாழ 210,000க்கும் அதிகமான தேவாலய உறுப்பினர்களிடம் நடத்தப்படவிருந்த மருத்துவப் பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது.
தென்கொரியாவின் நான்காவது ஆகப் பெரிய நகரான டேகுவின் மக்கள்தொகை 2.5 மில்லியன். அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 63 விழுக்காடு, அந்தத் தேவாலயத்துடன் தொடர்பானவை.
தென்கொரியாவில் கிருமித்தொற்று பாதிப்பால் இதுவரை 51 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், மற்ற உடல்நலப் பிரச்சினைகள் உடைய மூத்த குடிமக்களாவர்.