'பள்ளிவாசல்களை மூடியது கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் நடவடிக்கை'
சிங்கப்பூர் பள்ளிவாசல்களைத் தற்காலிகமாக மூடியது கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று தொடர்பு, தகவல் மற்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்துவதற்காக இங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களும் இன்று (மார்ச் 13) முதல் குறைந்தது ஐந்து நாட்களுக்கு மூடப்படும் என முயிஸ் எனப்படும் இஸ்லாமிய சமய மன்றம் நேற்று அறிவித்தது.
இந்த நடவடிக்கை, சிங்கப்பூரர்களையும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களையும் பாதுகாக்க உதவும் என்று டாக்டர் ஜனில் கூறினார்.
“சில பிரச்சினைகளை உடனடியாகக் கையாள வேண்டும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கிருமி தொற்றுவதற்குமுன் அதைத் தடுக்க முயலவேண்டும். நம்முடைய முக்கியமான சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும் கிருமித்தொற்று பெருகாமல் தடுக்கவும் இந்நடவடிக்கை மிக அவசியம்,’ என்றார் அவர்.
சிங்கப்பூர் வரலாற்றிலேயே முதன்முறையாக, இங்குள்ள 70 பள்ளிவாசல்களும் இன்று மூடப்பட்டன. மலேசியாவின் சிலாங்கூரில் கடந்த மாதம் நடந்த சமயப் பெருவிழாவில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்களில் இருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது. கிட்டத்தட்ட 90 சிங்கப்பூரர்கள் அந்தச் சமய நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையில் 18 உறுப்பினர்கள் கொண்ட சமூகப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக முயிஸ் கூறியது.
டாக்டர் ஜனில், உள்துறை, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், மருத்துவ நிபுணர்கள், சமயத் தலைவர்கள் உள்ளிடோர் அந்தப் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
“முஸ்லிம் சமூகத்தினருக்கான சமய வழிகாட்டுதல்களையும் சுகாதார ஆலோசனைகளையும் பரப்பும் முயற்சிகளுக்கு இந்தப் பணிக்குழு ஆதரவு வழங்கும்,” என்று முயிஸ் தெரிவித்தது.
பள்ளிவாசல்களில் இம்மாதம் 27ஆம் தேதி வரை சமயச் சொற்பொழிவுகள், சமய வகுப்புகள் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படும் என்றும் முயிஸ் கூறியிருக்கிறது.
பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்படுமுன் அவை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் உள்ளனவா என்று வரும் திங்கட்கிழமை மறுஆய்வு செய்யப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
#சிங்கப்பூர் #பள்ளிவாசல் மூடல் #கொரோனா #கொவிட்-19