கொரோனா பாதிப்பு: மலேசியாவில் பள்ளிவாசல்களை மூட அறிவுறுத்து
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களை 10 நாட்களுக்கு மூட அறிவுறுத்தப்பட இருக்கிறது.
மலேசிய வடமாநிலமான பெர்லிசின் இஸ்லாமிய அமைப்பு ஒன்று, உயர்மட்ட அதிகாரிகள் சிலருடன் நேற்று இரவு நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் 10 நாட்களுக்கு மூட மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை பரிந்துரைக்கவுள்ளது.
பெர்லிஸ் மாநில முஃப்தி முகம்மது அஸ்ரி ஸைனுல் அபிடின் இன்று வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் பதிவில் இதனைத் தெரிவித்தார்.
பள்ளிவாசல்கள் மூடப்படும் காலகட்டத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை உட்பட சமயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய பள்ளிவாசல்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார் அவர்.
இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று திரு அஸ்ரி குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பள்ளிவாசல்கள், தொழுகைக்கூடங்கள் அனைத்தும் நாளை (மார்ச் 17) முதல் 26ஆம் தேதி வரை துப்புரவுப் பணிகளுக்காக மூடப்படும் என்று அம்மாநில முஃப்தி முகம்மது யூசோஃப் அகமது இன்று அறிவித்திருந்ததை அடுத்து திரு அஸ்ரியின் கருத்து வெளிவந்துள்ளது.
அனைத்து பள்ளிவாசல்கள், தொழுகைக்கூடங்களை மூட உத்தரவிட்டிருக்கும் மலேசியாவின் முதல் மாநிலம் நெகிரி செம்பிலான்.
பெர்லிஸ் மாநிலத்தில் இம்மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டிருந்தது. சுகாதார அமைச்சு வெளியிட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
மலேசியாவில் சமயம் தொடர்பான விவகாரங்கள், அந்தந்த மாநிலங்களின் பார்வையின்கீழ் வருகிறது. மலேசியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஒன்பது மாநிலங்கள் மன்னர் ஆட்சியில் உள்ளன. சமயம் விவகாரங்கள் தொடர்பான முடிவு எடுக்கப்படும்போது அந்தந்த மாநிலத்தின் மன்னருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
மலேசியாவில் புதிதாக 190 பேருக்கு கொரோனா கிருமி ஏற்பட்டிருப்பது நேற்று ஒரே நாளில் உறுதிசெய்யப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோர், ‘தப்லிக்’ எனப்படும் சமய ஒன்றுகூடல் நிகழ்வுடன் தொடர்புடையவர்கள். பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை கோலாலம்பூரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், சிங்கப்பூரர்கள், புருணை நாட்டவர்கள் உட்பட சுமார் 16,000 பேர் கலந்துகொண்டனர்.