கிருமித்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் ஆசிய நாடுகள்; நடவடிக்கைகள் தீவிரம்
வெளிநாடுகளிலிருந்து திரும்புவோர் மூலம் கொரோனா கிருமித்தொற்று பரவல் அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகள், தொழில்நுட்பம் பொதிந்த மணிக்கட்டு பட்டைகளை அணிவித்தல், சிறைத் தண்டனை, கடுமையான அபராதம் போன்ற நடவடிக்கைகளின் மூலம் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றன.
இந்தக் கொள்ளைநோயின் பரவல் அதிகரிப்பதுடன், குறிப்பாக ஐரோப்பாவையே சூழ்ந்து அச்சுறுத்தும் நிலையில், சீனாவிலிருந்து பரவிய கொரோனா கிருமித்தொற்றின் முதல் அலையை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய சிங்கப்பூர், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகள் மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் இரண்டாம் அலையை எதிர்கொண்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து இந்த நாடுகளுக்கு வந்தவர்களிடையே இந்த கிருமித்தொற்று கடந்த வாரத்தில் அதிகம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய கிருமித்தொற்று பரவாமல் இருக்க, பயணத் தடை, வீட்டிலேயே இருப்பதற்கான ஆணை போன்றவற்றுடன் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டிய நிலை, பயண மையங்களான அந்த நாடுகளுக்கு ஏற்பட்டது.
அனைத்துலக அளவில் 211,000க்கும் அதிகமானோரைத் தாக்கியுள்ள இந்த கிருமித்தொற்றால் 8,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஐரோப்பாவில் மையம் கொண்டிருக்கும் இந்த கிருமித்தொற்றால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் தாண்டிவிட்டது.
ஆசியாவின் பெரிய, ஆனால் ஏழ்மை நிலையில் இருக்கும் இந்தோனீசியா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் அண்மைய நாட்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால் கிருமித்தொற்று அதிகரித்துள்ள நிலையில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய நெருங்கிய வட்டாரத்தில் பல நாட்களாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
கிருமித்தொற்று பாதிப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோருடன் 500,000க்கும் மேற்பட்டோர் தொடர்பில் இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கலாம் என்றும் இந்தோனீசியா தெரிவித்துள்ளது. 270 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தோனீசியாவில் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று பிற்பகலிலிருந்து முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிலிப்பீன்சில் இன்று உறுதிசெய்யப்பட்ட 13 பேரையும் சேர்த்து அங்கு 230 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் ஏதும் பதிவாகாத நிலையில், வெளிநாடுகளிலிருந்து அங்கு சென்றவர்களுக்கு ஏற்படும் கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அத்தகைய 39 சம்பவங்கள் அங்கு பதிவாகின. வெளிநாடுகளிலிருந்து வந்த பலரும் சீனாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றிருப்பதால் சீன அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
கிருமித்தொற்று பரிசோதனையில் பின் தங்கிய நாடுகளுக்கு அருகில் சிங்கப்பூர் அமைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 47 பேர் இங்கு புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.நேற்று அந்த எண்ணிக்கை 32 ஆக இருந்தது. ஆயினும் அண்மைய நாட்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டது. சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, மார்ச் 19 நிலவரப்படி 345.
கிருமிப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய சிங்கப்பூர், உள்ளூர்வாசிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியதுடன், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடைவிதித்தது; தென்கிழக்காசியா மற்றும் வேறு நாடுகளிலிருந்து வருவோரை இரு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்க ஆணையிட்டது.
ஹாங்காங்கிலும் கடந்த புதன்கிழமை ஆக அதிகமாக 25 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து, வந்த பயணிகளும் மாணவர்களும்தான். அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, நேற்றைய நிலவரப்படி, 199. மக்காவ், தைவான் தவிர மற்ற நாடுகளிலிருந்து ஹாங்காங்குக்குள் நுழைவோர் 14 நாட்களுக்கு தடைகாப்பில் இருக்க அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
ஹாங்காங்குக்கு ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு வந்திருப்பதாகவும், ஆனால், மூன்றில் ஒரு பங்கினருக்கே மணிக்கட்டு பட்டைகளின் இயக்கம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
135 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தைவானும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் அரசாங்க தனிமைப்படுத்தும் வசதிகளில் தங்க வைத்துள்ள வியட்னாமிலிருந்து வருவோருக்கு தைவானில் தடையில்லை..
அதே போல புதன்கிழமை முதல் மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு வெளிநாட்டினர் யாரும் செல்ல முடியாது.
இந்தியர்கள் உட்பட, வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு தடை விதித்துள்ள இந்தியாவில், வரும் ஞாயிற்றுக் கிழமை முதல், வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்கள் அங்கு தரையிரங்க அனுமதியில்லை.
#ஆசியா #கொரோனா #சிங்கப்பூர்