கொவிட்-19 நிதிக்காக இரண்டு மாத ஊதியத்தை விட்டுக்கொடுக்கும் மலேசிய அமைச்சரவை
மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கான இரண்டு மாத ஊதியத்தை கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும் என்று மலேசிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரதமர் அலுவலகம் இன்று (மார்ச் 26) வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது என்றும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் தயாராக இருப்பதை நிரூபிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அறிக்கை கூறியது.
மார்ச் 11ஆம் தேதி கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் ஏற்படுத்திய முயற்சியாக கொவிட்-19 நிதி அமைகிறது.
நேற்றைய நிலவரப்படி, அரசு மானியங்கள் உட்பட மொத்த நன்கொடை 8.49 மில்லியன் ரிங்கிட் (S$2.83 மி.) இந்நிதியில் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் தென்கிழக்காசியாவிலேயே ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மலேசியா விளங்குகிறது. நேற்று ஒரே நாளில் அந்நாட்டில் 172 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றையும் சேர்த்து, மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1,796ஐ எட்டிவிட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.