பலியானவர்களுக்கு இத்தாலி மௌன அஞ்சலி
ரோம்: கொரோனா கிருமித் தொற்றுக்குப் பலியான 11,591 பேருக்கு இத்தாலி நேற்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது. மேலும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
இத்தாலிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்ட கிருமித் தொற்றின் ஒரு மாதத்தை அனுசரிக்கும் வகையில் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. வாட்டிகன் சிட்டியிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. பிப்ரவரி மாதத்தின் இறுதி வாக்கில் மிலானில் முதல் சம்பவம் கண்டறியப்பட்டது.
கிருமித் தொற்றால் உலகளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்பு இத்தாலியில் ஏற்பட்டுள்ளது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் இத்தாலிய அரசாங்கம் நாடு முடக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால் கிருமிப் பரவலால் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடக்கம் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,590 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களில் அதிகபட்ச எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 14,620 ேபர் குணமடைந்தனர்.
இதற்கிடையே, இத்தாலியில் விரைவில் நிலைமை சீரடையக்கூடும் என்றாலும் தொடர்ந்து விழிப்புடன் பின்தொடர்வது அவசியம் என்றும் உலக சுகாதார மையத்தின் மூத்த அதிகாரி சொன்னார்.