கொரோனா நிலவரம்: தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான்
தாய்லாந்து: மேலும் மூவர் மரணம்; புதிதாக 102 பேருக்குத் தொற்று
பேங்காக்: தாய்லாந்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியதாகவும் மேலும் மூவர் மரணமடைந்து விட்டதாகவும் அந்த நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
அவர்களையும் சேர்த்து தாய்லாந்தில் மொத்தம் 2,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி முதல் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். பேங்காக் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கிய 152 தாய்லாந்து நாட்டினரைத் தனித்து வைக்க அதிகாரிகள் முயன்றபோது அவர்கள் அதற்கு மறுத்துவிட்டதால் பிரச்சினை ஏற்பட்டது. அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்குத் தாய்லாந்து தடை விதித்தது.
ஹாங்காங்: கலகத்தடுப்பு போலிசார் 130 பேர் தனிமையில் வைப்பு
ஹாங்காங்: ஹாங்காங்கில் கலகத்தடுப்புப் போலிசார் சுமார் 130 பேர் தனிமையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா கிருமித் தொற்றி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அதிகாரிகள் இந்த நடிவடிக்கையை எடுத்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் போலிஸ் தெரிவித்தது.
ஜப்பானில் 3,506 பேர் பாதிப்பு
தோக்கியோ: ஜப்பானில் நேற்று வரை 3,506 பேரை கொரோனா கிருமி தொற்றியதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சும் மாநில அரசுகளும் தெரிவித்தன. சனிக்கிழமை மட்டும் 367 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளானார்கள்.
ஜப்பானில் 96 பேரை கொரோனா கிருமிகள் கொன்றுவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.