வீட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள்; கணக்கில் வராத உயிரிழப்புகள்
மிலன்: இத்தாலியில் கிருமித் தொற்றால் மருத்துவமனைகளில் இறப்பவர்கள் மட்டுமல்லாமல் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று அது பலனளிக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இத்தாலியின் பெர்காமோ மாகாணத்தில் மட்டும் மருத்துவமனையில் மாண்டவர்களின் எண்ணிக்கை 2,060. ஆனால் வீட்டில் சிகிச்சை பெற்று இறந்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் அது இரு மடங்காகும் என்கிறது ஆய்வு.
அறிகுறிகள் கண்டறியப்படாமலும் சிகிச்சைக்கான தொலைபேசி ஆலோசனைகள் போதாத நிலையிலும் நிறைய பேர் வீட்டிலேயே இறந்துவிடுவதாகக் கூறப்படுகிறது.
வீட்டிலுள்ளவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைத்தால் பல மரணங்கள் தவிர்க்கப்படலாம் என்றார் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வீட்டிற்குச் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர்.
மேலும் மருத்துவர்கள் தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போதுமான முகக்கவசங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாததால் வீட்டிற்குச் சென்று சிகிச்சையளிப்பதைத் தவிர்ப்பதாகவும் அவர் சொன்னார்.
ஜெர்மனி: 90,000 பேர் தொற்றால் பாதிப்பு
ஜெர்மனியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,000ஐ கடந்துள்ளது. இதுவரை 1,444 பேர் பலியாகினர். 26,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் அந்நாட்டைச் சேர்ந்த இளம் மருத்துவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து தாய் நாடு திரும்பி சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.