சாலைகளிலோ, மனிதர்கள் மீதோ கிருமிநாசினி தெளிப்பதால் பலனில்லை, அபாயகரமானது: உலக சுகாதார நிறுவனம்
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் பொருட்டு சில நாடுகளில் தெருக்களில் கிருமிநாசினிகள் தெளிப்பதைக் குறிப்பிட்டு, அதனால் அந்தக் கிருமியை ஒழித்துவிட முடியாது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், அது சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் வித்திடும் என்று எச்சரித்துள்ளது.
தெளிக்கப்படும் கிருமிநாசினிகள் தூசி, துகள்களால் கிருமிநாசினிகள் மாசுபடுவதால், அவை கிருமிகளை அழிப்பதில் தொய்வு ஏற்படுகிறது என்கிறது அந்நிறுவனம்.
அப்படி தூசி, துகள்கள் இல்லாவிட்டாலும், தெளிக்கப்படும் கிருமிநாசினியால் கிருமிகள் இருக்கும் அனைத்து பரப்புகளிலும், கிருமிகள் அழியத் தேவைப்படும் காலகட்டம் வரை நிலைத்திருக்க முடியாது என்பதும் அதன் கருத்து.
பொதுவாக சாலைகளிலும் நடைபாதைகளிலும் கிருமிகள் தங்கியிருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுச் சூழலில் கிருமிநாசினிகளைத் தெளிப்பது மனிதர்களின் சுகாதாரத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
அதேபோல, தனிநபர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் என்றும் அவர் தமது எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் கிருமி பரப்புவதை அது தடுக்காது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
குளோரின் உள்ளிட்ட நச்சு ரசாயனங்களை மக்கள் மீது தெளிப்பதால் அவர்களது கண்கள் பாதிக்கப்படுவதுடன் தோலில் எரிச்சல், மூச்சு குழாய் அழற்சி, வயிற்றுக்கோளாறு போன்றவையும் ஏற்படலாம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கிருமிநாசினியைப் பயன்படுத்த விரும்பினால், அவற்றில் தோய்க்கப்பட்ட துணி அல்லது திசுத்தாளைப் பயன்படுத்துவதையே அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.