கொவிட்-19 பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?
கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய சளி அல்லது எச்சில் மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
பொதுவாக அது எவ்வாறு செய்யப்படும் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அந்தப் பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது எனும் விவரம் தெரியுமா?
கொவிட்-19 பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கப்படும் பரிசோதனைக்கு இதுவரை உட்படாதவர்கள், அது என்ன பரிசோதனை, எவ்வாறு செய்யப்படும் என்பது பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் உங்களுக்கு இருக்கலாம்.
அந்தப் பரிசோதனை பற்றிய விவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
பரிசோதனைகள் எங்கு செய்யப்படுகின்றன?
- வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், சில பலதுறை தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலர் பள்ளி ஊழியர்களுக்காக) போன்ற இடங்களில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு குழுவாக பரிசோதனைகள் செய்யப்பட்டன.
- மருத்துவமனைகள், 196 பலதுறை மருந்தகங்கள் மற்றும் தனியார் மருந்தகங்கள்
- பழைய போலிஸ் அகாடமி, மெரினா பே மிதக்கும் மேடை, புக்கிட் காம்போக் விளையாட்டுக் கூடம், பீஷான் விளையாட்டுக் கூடம் ஆகிய நான்கு வட்டார பரிசோதனை நிலையங்கள்
- 2 பிடோக் நார்த் ஸ்திரீட் 2ல் (முந்தைய செபாக் டக்ரா விளையாட்டுக் கூடம்)
யாருக்கெல்லாம் குழுவாக பரிசோதனைகள் செய்யப்பட்டன?
- மூத்தோர் இல்லவாசிகள், ஊழியர்கள்
- பாலர் பள்ளி ஊழியர்கள்
- முன்னிலை அதிகாரிகள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் உட்பட அத்தியாவசிய சேவை ஊழியர்கள்
- தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், அவர்களில் சிலர் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர்
- மருத்துவரைப் பார்க்கும்போது கடுமையான சுவாசப் பிரச்சினையுடன் இருந்தவர்கள், அவர்களில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் (13 வயதுக்கு மேற்பட்டோர்), ஊழியர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
‘பாலிமெரேஸ் செயின் ரியாக்ஷன்’ (PCR) பரிசோதனை என்பது என்ன?
ஒருவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருக்கிறதா என்பதைக் காட்டும் பொதுவான பரிசோதனை
PCR பரிசோதனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
- எச்சில் அல்லது சளி மாதிரியைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனை மாதிரியை எடுக்க 3 அல்லது 4 நிமிடங்களாகும். இந்தப் பரிசோதனை இலவசம்.
- பெரும்பாலான ஆய்வகங்கள் இந்தப் பரிசோதனை முடிவுகளை அதே நாளில் அளித்துவிடும்.
- உங்களது அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்லுங்கள். சரியான நபருக்குத்தான் பரிசோதனை செய்யப்படுகிறது என்பதை உறுதி செய்ய, பலமுறை அடையாளம் சோதிக்கப்படும்.
PCR பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?
- மூக்கு அல்லது தொண்டையின் உட்புறத்திலிருந்து மாதிரிகள் எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் மூக்கின் உட்புறத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான கொரொனா கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- மூக்கில் ரத்தம் வடிந்தாலோ, அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலோ அல்லது அடிபட்டிருந்தாலோ மூக்கிலிருது மாதிரி எடுக்கப்படமாட்டாது.
மூக்கிலிருந்து பரிசோதனை மாதிரி எடுப்பது...
- உங்களுக்கு ஒரு திசுத்தாள் வழங்கப்படும். மூக்கில் இருக்கும் சளியை அகற்ர அதனைப் பயன்படுத்தலாம். பின்னர் அதனை கவனமாக மருத்துவக் கழிவுகளுக்கான குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்த வேண்டும்.
- பின்னர் உங்கள் தலையைப் பின்புறம் சாய்த்து நாடியைத் தூக்க வேண்டும்.
- உங்களது மூக்கில் உள்ள துவாரங்களில் பரிசோதனை மாதிரியைச் சேகரிப்பதற்கான பஞ்சு குச்சி (swab) வைக்கப்படும்.
-நீங்கள் அசையாமல் இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு சற்று அசௌகரியம் ஏற்படலாம்; கண்ணீர்கூட வரலாம்.
- உங்களுக்கு வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் நீங்கள் உங்களது கையை உயர்த்தி தெரிவிக்கலாம்.
-பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டதும், அது உங்கள் பெயர் ஒட்டப்பட்ட பையில் வைக்கப்படும்.
தொண்டையிலிருந்து பரிசோதனை மாதிரி எடுப்பது...
- உங்களது தலையைப் பின்புறம் சாய்த்து, வாயைப் பெரிதாகத் திறக்க வேண்டும்.
-உங்களது அடித்தொண்டையில் ஒரு பஞ்சு குச்சி (swab) 2 அல்லது 3 வினாடிகளுக்கு வைக்கப்படும்.
-நீங்கள் அசையாமல் இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு சற்று அசௌகரியம் ஏற்படலாம்.
- உங்களுக்கு வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் நீங்கள் உங்களது கையை உயர்த்தி தெரிவிக்கலாம்.
-பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டதும், அது உங்கள் பெயர் ஒட்டப்பட்ட பையில் வைக்கப்படும்.
(கிளனிகள்ஸ் மருத்துவமனையின் தலைமை நடைமுறை அதிகாரி டாக்டர் மெல்வின் ஹெங்கிடமிருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பெற்ற தகவல்.)