வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் சரிவு
வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் சரிந்துவிட்டது என்றும் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டு முடிவிலிருந்ததைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், பணிப்பெண்கள் தவிர்த்து, வேலையில் இருப்போரின் எண்ணிக்கை 25,600 குறைந்துவிட்டதாக அமைச்சு இன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளது. காலாண்டு அடிப்படையில் இதற்குமுன் இப்படி ஒரு சரிவு ஏற்பட்டதில்லை.
வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததே இதற்குக் காரணம். எனினும், வேலையில் இருக்கும் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
வர்த்தகம், சுற்றுலா சார்ந்த தொழில்துறைகளில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகளவில் உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்ததாக வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த அமைச்சின் காலாண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆட்குறைப்பும் அதிகமாக இருந்தது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 2010 செப்டம்பருக்குப் பிறகு ஆக மோசமான வீழ்ச்சியைக் கண்டது.
ஆனால், இரண்டாம் காலாண்டில்தான் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்ததால் வேலைவாய்ப்பு நிலவரம் இன்னும் அதலபாதாளத்தை எட்டவில்லை எனச் சொல்லப்படுகிறது.
“ஜனவரியில் புத்தாண்டைக் கொண்டாட பலரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இப்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் பிப்ரவரியில் இல்லை என்றபோதும் அந்த மாதத்தில் சுற்றுப்பயணத் துறை மோசமான பாதிப்பைச் சந்தித்தது. அதாவது, கொவிட்-19 கிருமித்தொற்றின் முழுமையான தாக்கம் முதல் காலாண்டில் இல்லை,” என்றார் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ.
உணவு, பானம், சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, தங்குமிடம், கலைகள், பொழுதுபோக்கு, கேளிக்கை போன்ற துறைகளில் வேலைவாய்ப்பில் கடுமையான பாதிப்பு இருந்தது. கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் சரிவு இருந்தபோதும் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களே பாதிக்கப்பட்டனர்.