முதியோர், சிறார் இல்லங்களில் இருப்போர் உட்பட 3,300 பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை
சிறுவர் இல்லங்கள், நெருக்கடி கால அடைக்கல இடங்கள், உடற்குறைபாடுடைய சிறுவர்களுக்கான இல்லங்கள் உட்பட வெவ்வேறு நிலையங்களின் ஊழியர்கள், இல்லவாசிகள் என சுமார் 3,300 பேர் நாளை மறுதினத்திற்குள் (ஜூலை 1ஆம் தேதி) கொவிட்-19 கிருமித்தொற்றுக்காக பரிசோதிக்கப்படுவர்.
கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சமூக அளவில் விரிவுபடுத்தப்படும் பரிசோதனை முயற்சியின் ஓர் அங்கமாக இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
உடற்குறைபாடுடையோர் தொடர்பில் இயங்கி வரும் பயிலரங்குகள், நடவடிக்கை நிலையங்கள், சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான பராமரிப்பு நிலையங்கள் ஆகியவறுக்காக சமூகச் சேவைகளில் ஈடுபடும் பணியாட்களும் இப்பரிசோதனையைச் செய்து கொள்வர்.
மூத்தோர் பராமரிப்பு வசிப்பிடங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அங்கு வசிக்கும் இல்லவாசிகள் ஜூலை மாதத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுவர் என்றும் திரு லீ இன்று (ஜூன் 29) அறிவித்தார்.
அவர்களின் சுகாதாரத்தைக் கண்காணிக்க இப்பரிசோதனைகள் உதவுவதுடன் கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக நடப்பில் உள்ள மற்ற நடவடிக்கைகளுக்கும் இவை துணைபுரியும்.
மூத்தோர் பராமரிப்பு வசிப்பிடங்களில் நடத்தப்பட்ட முந்தைய கிருமித்தொற்று பரிசோதனைகளில் யாருக்கும் கிருமி பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டதாக அமைச்சர் லீ பகிர்ந்துகொண்டார்.
“நாம் விழிப்புடன் இருக்கிறோம். கொவிட்-19 சூழலில் ஒரு புதிய, பாதுகாப்பான வழக்கநிலையை நாம் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்த இந்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வோருக்கு நன்றி,” என்று அவர் கூறினார்.
பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடரும் காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூரில் கிருமித்தொற்று பரிசோதனைத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு இம்மாதம் 25ஆம் தேதி அறிவித்திருந்தது.
இதன்படி, கொவிட்-19 கிருமி பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய கூடுதல் நபர்கள் பரிசோதிக்கப்படுவர். 13 வயது, அதற்கும் மேற்பட்டவர்களுக்கு கடுமையான சுவாசத்தொற்று கண்டறியப்பட்டாலோ சுற்றுப்பயணிகளுடன் முன்னிலை ஊழியர்கள் தொடர்பில் இருந்திருந்தாலோ அவர்களும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.