கொவிட்-19 சோதனை முறையில் முன்னேற்றம்
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான நோய்முறியடிப்பு சோதனை முறையை உருவாக்க பிரிட்டன் எடுத்து வரும் முயற்சிகளில் நம்பிக்கை அளிக்கும் முன்னேற்றம் தென்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற முக்கிய சோதனைகளில் ஒன்று வெற்றிகரமாக நிறைவடைந்ததாக 'டெய்லி டெலிகிராப்' என்ற செய்தித்தாள் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
விரலில் இருந்து குத்தி அதனிலிருந்து எடுக்கப்படும் ரத்தத் துளிகளின்மூலம் ஒருவருக்குக் கொரோனா கிருமித்தொற்று இதுவரையில் ஏற்பட்டுள்ளதா என்பதை 20 நிமிடங்களிலேயே கண்டுபிடிக்கும் இந்த முறை 98.6 விழுக்காடு துல்லியமானது என்பதை ஜூன் மாதத்தின்போது செய்யப்பட்ட சோதனைகள் காட்டியதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது. ரத்த மாதிரிகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பும் தற்போதைய முறை சில நாட்களை வரை நீடிக்கலாம் என்பதால் புதிய சோதனை முறையால் கிருமித்தொற்று விரைவிலேயே உறுதி செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆக்ஸ்பர்டு பல்கலைக்கழகத்திற்கும் பிரிட்டனின் முன்னணி நோயறிதல் நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவத் திட்டமான இயூ-கே ஆர்டிசி, இந்தச் சோதனை முறை மூலம் உருவாக்கியுள்ளது. இவ்வாண்டின் முடிவுக்குள் இந்தப் புதிய முறையை பரவலாகச் செயல்படுத்த பிரிட்டிஷ் அமைச்சர்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.