கைபேசி வழியாக முதன்முறையாக ‘குர்ஆன்’ இணையக்கற்றல்
பகுதி நேர துப்புரவுப் பணியாளர் ராபியா பிந்தி ஒஸ்மான், 64, கொவிட்-19 முறியடிப்புக் காலக்கட்டத்தின்போது வேலைக்குப் போக வேண்டிய கட்டாயமின்றி வீட்டிலேயே இருந்தார். இதனால் அலுத்துப்போன திருமதி ராபியாவை ஸூம் வகுப்புகள் வழி இஸ்லாமிய சமய நூலான திருக்குர்ஆனை ஒதக் கற்றுக்கொள்ளும் யோசனையை தமது மருமகள் பரிந்துரைத்ததாகக் கூறினார்.
"நான் இணையத்தை அதிகம் பயன்படுத்துவதில்லை. வாட்ஸ்அப் சேவையைத் தவிர எந்தச் சமூக ஊடகத்தையும் பயன்படுத்தியதில்லை. எனவே ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் எனது மருமகள் கொடுத்த ஊக்கத்தால் இந்த வகுப்புகளில் இணைந்தேன்," என்று அவர் கூறினார்.
இரண்டு மகன்களுக்குத் தாயாகவும் இரண்டு பேரப்பிள்ளைகளுக்குப் பாட்டியாகவும் இருக்கும் திருமதி ராபியா, ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தொடங்கிய ரமலான் மாதத்தின் ஒருவ்வொரு நாளும் தமிழில் நடத்தப்படும் திருக்குர்ஆன் வகுப்பில் காலை ஏழு மணி முதல் தமது கைத்தொலைபேசி வழியாக ஸூம் வகுப்புகளில் இணைவார். கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்த இந்த வகுப்பில் கிட்டத்தட்ட 40 பேர் இணைந்திருக்கின்றனர்.
சிறு வயதில் குர்ஆன் ஓதும் வகுப்புகளுக்குச் சென்றிருந்த திருமதி ராபியா, இக்காலத்தின் தொழில்நுட்பத்தால் வகுப்புகள் மிகவும் தரமாக இருப்பதாகத் தெரிவித்தார். " அக்காலத்தில் குர்ஆன் வாசகங்களை நாங்கள் மனப்பாடமாகக் கற்றுக்கொண்டோம். இப்போது எங்களுக்கு சுவாரசியமான முறையில் அந்த வாசகங்களின் பொருளும் கற்றுத்தரப்படுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.
வாசகங்களை துல்லியமான உச்சரிப்புடன் ஓதக் கற்றுக்கொண்டதாக திருமதி ராபியா கூறினார். அந்தக் காலத்தில் எனக்கு இப்படி தெளிவாகக் கற்பிக்கப்படவில்லை என்பதால் நான் இந்த வகுப்பை விரும்புகிறேன். "போதகரின் வகுப்புகள் பதிவாவதால் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அந்த வகுப்புகளை மீண்டும் கேட்கலாம்" என்றார் அவர்.
சுலபமாகவும் வசதியாகவும் உள்ள இந்த கற்றல் முறை தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறிய திருமதி ராபியா, இதுவே நேர்முக வகுப்பாக இருந்தால் தாம் ஒரு மாதம் முழுவதும் இதில் கலந்துகொள்ளாமல் போயிருக்கலாம் எனத் தெரிவித்தார். இரண்டாம் கட்டத் தளர்வுக்குப் பிறகும் இணையக் கற்றலுக்கான நல்ல வாய்ப்புகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்