போதைக்காக கிருமிநாசினி குடித்த ஒன்பது பேர் பலி
அமராவதி: மது கிடைக்காத நிலையில் கிருமி நாசினியை அருந்தினால் போதை கிட்டும் என்று கருதி அதைப் பருகிய ஒன்பது பேர் ஆந்திராவில் உயிரிழந்துள்ளனர்.
பிரகாசம் மாவட்டம் குறிக்கேடு பகுதியில் கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு மதுக்கடைகள் மூடப்பட்டதால் கடந்த பத்து தினங்களாக அப்பகுதியில் உள்ள மதுப்பிரியர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில் கிருமி நாசினி குடித்தால் போதை கிடைக்கும் என நம்பி 20 பேர் அதைப் பருகியுள்ளனர். அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது.
உயிரிழந்த ஒன்பது பேரில் மூவர் பிச்சை எடுப்பவர்கள் என்றும் ஆறு பேர் குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கிருமிநாசினி அருந்திய ஒருவர் தமது வயிற்றுப் பகுதியில் கடும் எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் மற்றவர்களும் வயிற்றுவலி, எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவர்கள் கிருமிநாசினியை அப்படியே அருந்தினார்களா அல்லது கள்ளச்சாராயத்துடன் கலந்தனரா என்பது தெரியவில்லை.