வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்கு கிருமித்தொற்று
சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 23) புதிதாக ஐவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
புதிதாகப் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சமூக அளவில் அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் தொடர்ந்து 13வது நாளாக எவருக்கும் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மேற்கூறப்பட்ட ஐவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,165 ஆக உள்ளது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜனவரி 23ஆம் தேதி முதல் கிருமித்தொற்றுச் சம்பவம் உறுதியானதை அடுத்து, சமூக அளவில் 13 நாட்களாக எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படாதது இதுவே முதன்முறை.