'ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட 100,000ல் ஒருவருக்கு கடும் ஒவ்வாமை'
ஃபைசர் - பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் கிட்டத்தட்ட லட்சத்தில் ஒருவருக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் பயனை ஒப்பிடும்போது, இத்தகைய மிகக் குறைந்த அளவிலான ஒவ்வாமை விளைவுகள் பெரிதல்ல என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 1,893,360 பேருக்கு டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 27 முதல் 60 வயதுக்குட்பட்ட 21 பேருக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட 21 பேரில் 19 பேர் பெண்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 முதல் 150 நிமிடங்களுக்குள் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. 21 பேரில் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ஆனால், ஒவ்வாமையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தோலில் தடிப்பு, தொண்டை அடைப்பது போன்ற உணர்வு, நாக்கு வீங்கியது போன்ற உணர்வு, மூச்சுவிடுவதில் சிரமம், உதடுகளில் வீக்கம், வாந்தி, உலர் இருமல் போன்ற அறிகுறிகள் அவர்களுக்குத் தென்பட்டன.
தடுப்பூசிபோட்டுக்கொண்ட மில்லியன் பேரில் 11.1 ஆளுக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டதை இந்தத் தரவுகள் காட்டுவதாக மூத்த சிடிசி அதிகாரி நான்சி மெஸ்ஸனர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
பொதுவாக ஃபுளுவுக்கு போடப்படும் தடுப்பூசிகளில் ஒரு மில்லியன் பேரில் 1.3 பேருக்கு இத்தகைய கடும் ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஃபைசர் தடுப்பூசியில் இந்த விகிதம் 10 மடங்கு அதிகம்.
இத்தகைய ஒவ்வாமைக்கு சிகிச்சை இருப்பதாலும் கொவிட்-19 ஏற்படுவதால் உருவாகும் தாக்கத்தைவிட ஒவ்வாமையால் ஏற்படும் தாக்கம் சிறியது என்பதாலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதையே பரிந்துரைப்பதாக திருவாட்டி மெஸ்ஸனர் தெரிவித்தார்.
முதல் டோஸ் தடுப்பூசி போடும்போது ஒவ்வாமை ஏற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.