மலேசியா: இலேசான தொற்று அறிகுறியுள்ளோர், அறிகுறி இல்லாதோருக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை
இலேசான அறிகுறி அல்லது அறிகுறிகளே இல்லாத கொவிட்-19 தொற்று நோயாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என்றும் மலேசிய சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்து இருக்கிறார்.
அதே நேரத்தில், சுகாதாரப் பணியாளர்களால் அந்நோயாளிகள் கட்டாயமாகக் கண்காணிக்கப்படுவர்.
கொரோனா தொற்று நோயாளிகளில் அறிகுறிகள் இல்லாதோர் முதல்நிலையினர் என்றும் இலேசான அறிகுறிகள் உள்ளோர் இரண்டாம் நிலையினர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அவ்விரு நிலை நோயாளிகளும் பத்து நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கடைசி நாளன்று அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அமைச்சர் பாபா கூறினார்.
ஆயினும், வீட்டிலிருந்தபடியே கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை பெற அனுமதிக்குமுன் வீட்டின் அளவு, உடன் எத்தனை பேர் தங்கியுள்ளனர் ஆகியவற்றைச் சுகாதார அமைச்சு மதிப்பிடும். வீடு சிறியதாக இருந்தால் அல்லது அதிகமானோர் வசித்தால், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
மலேசியாவில் இன்று முதல் அவசரநிலையும் நடமாட்டக் கட்டுப்பாடுகளும் நடப்பிற்கு வந்த நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பைச் சுகாதாரப் பணியாளர்கள் வரவேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.