வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் டிசம்பர் 15க்குப் பிறகு முதல் கிருமித்தொற்று சம்பவம்
சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 38 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,984 ஆக அதிகரித்துள்ளது. 38 பேரில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர்.
டிசம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு தங்கும் விடுதியில் பதிவாகி இருக்கும் முதல் கிருமித்தொற்றுச் சம்பவம் இது என சுகாதார அமைச்சின் இன்றைய அறிக்கை குறிப்பிட்டது. இந்த ஒருவரைத் தவிர மற்ற 37 பேரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அது தெரிவித்தது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பதிவான 17 கிருமித்தொற்று சம்பவங்களில் இந்தியாவிலிருந்து திரும்பிய 83 வயது சிங்கப்பூரரும் அடங்குவார். ஆனால், தொற்றுக்கான அறிகுறி எதுவும் அவரிடம் தென்படவில்லை. திங்கட்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது.
அன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்திறங்கியது முதல் அவர்கள் அனைவரும் கட்டாய இல்லத்தனிமை உத்தரவை நிறைவேற்றி வருவதாக சுகாதார அமைச்சு அன்றிரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. சமூக அளவிலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் யாருக்கும் தொற்று இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.