இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 115,000க்கும் மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று
இந்தியாவில் ஒரே நாளில் 115,736 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக ஒருநாள் தொற்று எண்ணிக்கை 100,000ஐ கடந்தது. இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 103,844 பேருக்குத் தொற்று உறுதியானது.
கொரோனா தொற்று முதல் அலையின்போது கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு 98,795 ஆக இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் கொரோனா இரண்டாம் அலையில் ஏப்ரல் 5ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,03,844 ஆக உயர்ந்தது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவில் கிருமித்தொற்றின் இராண்டாவது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றைத் தடுக்கும் வகையில் மாநில அரசாங்கங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.