தடுப்பூசிக்குப் பதிவு செய்வோர் குறைவாக இருப்பதால் தடுப்பூசித் திட்ட அட்டவணையை முன்னால் கொண்டுவரும் மலேசியா
கொவிட்-19க்கு எதிராக மலேசியாவில் தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டம் தொடங்கி ஒரு மாதமே ஆன நிலையில், தடுப்பூசிக்கு பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தடுப்பூசித் திட்ட அட்டவணையை அந்நாட்டு அரசாங்கம் முன்னால் கொண்டு வருகிறது.
அதாவது, தடுப்பூசித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை மலேசியா இந்த மாத இறுதியில் நடைமுறைப்படுத்த இருக்கிறது. தடுப்பூசிக்குப் பதிந்துகொள்வோர் விகிதம் அடுத்த இரு மாதங்களில் மேம்படவில்லை என்றால் கொள்கை மாற்றத்தை மலேசிய அரசாங்கம் பரிசீலிக்கும்.
இந்த மாத நடுப்பகுதியில் இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தின்கீழ், மலேசிய மூத்த குடிமக்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டும் தடுப்பூசிக்குப் பதிந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மலேசியாவின் 33 மில்லியன் மக்கள்தொகையில் கால்வாசிக்கும் குறைவானோரே தடுப்பூசிக்குப் பதிந்துள்ளனர். புத்ராஜெயாவைத் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசிக்குப் பதிந்துகொள்வோர் விகிதம் 50 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதத்திலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், தடுப்பூசிக் கொள்கையை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்று மலேசியாவில் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதின் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கூறினார்.
மலேசியா தனது தடுப்பூசி விநியோகத்தின் பெரும்பகுதியை ஜூலையில்தான் பெறவிருக்கிறது.
தனது மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் இவ்வாண்டு இறுதிவாக்கில் கூட்டு நோயெதிர்ப்புச் சக்தியைப் பெற மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
மலேசியாவில் தற்போது தடுப்பூசித் திட்டம் கட்டாயமாக்கப்படவில்லை. எனினும், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. எனினும், தற்போது தடுப்பூசிக்குப் பதிந்துகொள்வோர் விகிதம் குறைவாக இருப்பதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறினார்.