பிரேசிலில் ஒரே நாளில் கிருமித்தொற்றால் 4,000 பேருக்கு மேல் மரணம்
பிரேசிலில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 4,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
ஆனால் கொவிட்-19க்கு எதிராக நாட்டை முடக்க அதிபர் ஜேர் பொல்சனாரோ தயக்கம் காட்டி வருகிறார். நாடு முழுவதும் உருமாறிய கிருமித்தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது.
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் மடிந்து வருகின்றனர்.
இதனால் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. பிரேசிலில் இதுவரை தொற்றுக்கு 337,000 பேர் மாண்டுவிட்டனர்.
உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில்தான் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.