வாரயிறுதிக் கட்டுப்பாட்டுத் தளர்வுக்கு பிறகு லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசா கடைத்தொகுதிகளில் கூட்டம்
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள லக்கி பிளாசா, நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள பெனின்சுலா பிளாசா ஆகிய இரு கடைத்தொகுதிகளுக்குச் செல்வோருக்கான கட்டுப்பாட்டுத் தளர்வுகள் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று (ஏப்ரல் 11) அவ்விரு கடைத்தொகுதிகளுக்குச் சென்றோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
பிலிப்பீன்ஸ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரபலமான ஒன்றுகூடும் இடங்களாக அவ்விரு கடைத்தொகுதிகளும் அமைந்துள்ளன. அங்கு சென்று நண்பர்கள், உறவினர்களைச் சந்திப்பது, உணவருந்துவது, முடிதிருத்தம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இவ்விரு கடைத்தொகுதிகளில் வாரயிறுதிக் கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அப்போது முதல் அவ்விரு கடைத்தொகுதிகளின் வர்த்தகம் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவ்விரு கடைத்தொகுதிகளிலும் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கொவிட்-19 கிருமித்தொற்று அச்சமும் அங்கு நிலவியது. லக்கி பிளாசாவில் நேற்று காலையில் வருகையாளர் வரம்பு 6,445ஐத் தொட்டதும் அந்தக் கடைத்தொகுதி சிறிது நேரம் புதிய வருகையாளர்களை அனுமதிக்கவில்லை.
பாதுகாப்பு இடைவெளித் தூதர்களும் பாதுகாப்பு நிர்வாக அமலாக்க அதிகாரிகளும் அங்கு கூடியிருந்தவர்கள் பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்தனர். ஆயுதமேந்திய போலிசாரும் அங்கு காணப்பட்டனர்.
அவ்விரு கடைத்தொகுதி நடத்துநர்களும் பெரிய அளவிலான கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்தியதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.