வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் 17 ஊழியர்களுக்கு கிருமித்தொற்று
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 17 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (ஏப்ரல் 22) தெரிவித்துள்ளது.
அங்கு வசிக்கும் 35 வயது பங்ளாதேஷ் ஊழியருக்கு கடந்த திங்கட்கிழமை கிருமித்தொற்று உறுதியானதும் அந்தத் தங்குவிடுதியில் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் 17 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 17 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களுக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டு தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய சுகாதார அமைச்சும் நிபுணர்கள் குழுவும் விசாரணை நடத்துகின்றன.
இந்நிலையில், தங்குவிடுதியிலிருந்து மாற்றப்பட்டு ஊழியர்கள் மற்ற இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெலஸ்டியர் சாலையில் உள்ள குவாலிட்டி ஹோட்டல் மார்லோவில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
240 அறைகளைக் கொண்ட அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் சிலரை ஏறத்தாழ 15 பேருந்துகள் குவாலிட்டி ஹோட்டல் மார்லோவில் இன்று (ஏப்ரல் 22) காலை இறக்கிவிட்டன.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் வசிக்கும் 17 பேரைத் தவிர்த்து, இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 24 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளது.
இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,904ஆக அதிகரித்துள்ளது.
சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.