டான் டோக் செங் மருத்துவமனை நோயாளிகள், பணியாளர்களுக்கு இவ்வார இறுதிக்குள் கொவிட்-19 பரிசோதனை
டான் டோக் செங் மருத்துவமனையில் கொவிட்-19 மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் அங்கு சிகிச்சை பெறும் 1,100 நோயாளிகளுக்கும் 4,500 ஊழியர் களுக்கும் இந்த வார முடிவு வாக்கில் பரிசோதனை நடத்தப்படும் என அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகி டாக்டர் யூஜின் சோ அறிவித்தார்.
மருத்துவமனையின் பொது வார்டு ஒன்றில் வேலை செய்த தாதி ஒருவருக்கு கிருமித்தொற்று இருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அங்கு கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் குழுமத்தில் தொற்றுக்கு ஆளான 13 பேர் இருக்கிறார்கள். டான் டோக் செங் மருத்துவமனையில் அனைவருக்குமான பரிசோதனை வியாழக்கிழமை தொடங்கியது. நோயாளிகள் அனைவருக்கும் இன்று மாலைக்குள் சளி திரவ பரிசோதனை நடத்தப்படும். 4,500 ஊழியர்களுக்கும் அந்தப் பரிசோதனை இந்த வார முடிவில் பூர்த்தியாகும் என்று டாக்டர் சோ குறிப்பிட்டார். கிருமித்தொற்றுக்கு
ஆளானவர்களுடன் அணுக்கத் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவமனை அடையாளம் கண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 61 நோயாளிகள் தேசிய தொற்றுநோய் நிலையத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று நேற்று நடந்த கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு மெய்நிகர் செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் சோ கூறினார்.