மலேசியாவில் கிருமித்தொற்று அதிகரிப்பு; கட்டுப்பாடுகள் மறுஆய்வு
மலேசியாவில் கடந்த இரு வாரங்களாக கொவிட்-19 தொற்றியோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் தற்போதைய நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்படவிருக்கின்றன.
மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் இந்தத் தகவலை இன்று (மே 1) தெரிவித்தார். குறிப்பாக, அண்மைக் காலத்தில் கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
தலைநகர் கோலாலம்பூரிலும் சிலாங்கூர் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
மலேசியாவில் நேற்று (ஏப்ரல் 30) 3,788 பேருக்குத் தொற்று உறுதியானது. இரண்டரை மாதங்களில் பதிவாகியுள்ள ஆக அதிக எண்ணிக்கை இது.
மலேசியாவில் ஏப்ரல் 15ஆம் தேதி, கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 2,000ஐ கடந்தது. அன்று முதல் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.