இலவச கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசையில் மக்கள்
சிங்கப்பூரில் கொவிட்-19 பரிசோதனை நடத்தும் நான்கு வட்டாரப் பரிசோதனை மையங்களில் இன்று (மே 3) மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கிருமித்தொற்றுக் குழுமமாக உருவெடுத்துள்ள டான் டோக் செங் மருத்துவமனைக்குச் சென்றவர்களுக்கு இலவசமாக கொவிட்-19 பரிசோதனை வழங்கப்பட்டுவரும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் வட்டாரப் பரிசோதனை மையங்களுக்கு இன்று சென்றனர்.
டான் டோக் செங் மருத்துவமனையிலிருந்து ஏப்ரல் 18ஆம் தேதி முதல் வீடு திரும்பிய நோயாளிகள் அல்லது அன்றைய தேதியிலிருந்து அந்த மருத்துவமனைக்குச் சென்ற வருகையாளர்களுக்கு இந்த இலவச கொவிட்-19 பரிசோதனை வழங்கப்படுகிறது.
டான் டோக் செங் மருத்துவமனையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர், ஏப்ரல் 15 முதல் 27 வரை சென்றிருந்த பொது இடங்களில் பணியாற்றியவர்கள் அல்லது அங்கு சென்றவர்களுக்கும் பரிசோதனை வழங்கப்படுகிறது.
கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள எங்கே செல்லலாம் என்பது குறித்த விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக வழங்கப்படும்.
இந்நிலையில், அங் மோ கியோவில் உள்ள வட்டாரப் பரிசோதனை மையத்தில் இன்று (மே 3) 11 மணி நிலவரப்படி, 300 பேருக்கும் அதிகமானோர் வரிசையில் நின்றதாக சீன நாளிதழான சாவ்பாவ் தெரிவித்தது.