தடுப்பூசி போட்டபின் கடுமையான பக்கவிளைவு: 30 பேருக்கு நிதியுதவி
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கூறி, நிதியுதவி கோரி இம்மாதம் 3ஆம் தேதி வரை 104 விண்ணப்பங்கள் வந்தன.
அவர்களில் 30 விண்ணப்பதாரர்கள் இழப்பீடு பெறத் தகுதி பெற்றனர். அந்த 30 பேரில் 21 பேர் ஒவ்வாமையாலும் நால்வர் நரம்பு சார்ந்தும் மூவர் இதயம் சார்ந்தும் இரத்தம், தோல் சார்ந்த பிரச்சினைகளால் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டனர்.
நிதியுதவி கேட்டு வந்த 45 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் இன்னும் 29 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன என்றும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (மே 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.