12-15 வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி: சுகாதார அறிவியல் ஆணையம் மதிப்பீடு
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பாதுகாப்பானதாகவும் செயல்திறன்மிக்கதாகவும் இருக்கிறதா என்பதைச் சுகாதார அறிவியல் ஆணையம் மதிப்பிட்டு வருவதாகச் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நாடாளுமன்றத்தில் இன்று (மே 11) தெரிவித்தார்.
சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் 16 வயதுக்குக் குறைந்தவர்களும் இடம்பெறுவார்களா என்று நீ சூன் குழுத் தொகுதி எம்.பி. லூயிஸ் இங் கேள்வி எழுப்பியதை அடுத்து, அமைச்சர் கான் இவ்வாறு பதிலளித்தார்.
பள்ளிகளில் கொவிட்-19 தொற்றுக் குழுமங்கள் உருவானதால் கவலை எழுந்துள்ளது.
கடந்த மாதம் 30ஆம் தேதி எட்ஜ்ஃபீல்டு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள், பணியாளர்கள் உட்பட அப்பள்ளியுடன் தொடர்புடைய ஏறக்குறைய 1,500 எச்சில்/சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் எவரையும் கிருமி தொற்றவில்லை என முடிவுகள் காட்டின.
இம்மாதம் 7ஆம் தேதி விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதைத் தொடர்ந்து, அங்கும் 2,200க்கும் மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, 12 முதல் 15 வயதுப் பிரிவினரிடத்தில் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தலாம் என நேற்று அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.