எல்லைக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானம், கடல், பதனீட்டுத் துறை நிறுவனங்களுக்கு உதவிக்கரம்
கொவிட்-19 காரணமாக நடப்புக்கு வந்துள்ள புதிய எல்லைக் கட்டுப்பாடுகளின் விளைவாக வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கட்டுமானம், கடல், பதனீட்டுத் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்தத் துறைகளுக்கு அரசாங்கம் மேலும் உதவிகளை அளித்து வருகிறது என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் இன்று (மே 11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தத் துறைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 15,000 நிறுவனங்கள் இம்மாதம் டிசம்பர் வரை அதிக தீர்வைத் தள்ளுபடியைப் பெறும். வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு அந்தத் தள்ளுபடி $250 வரை இருக்கும். அதைப் பயன்படுத்திக்கொண்டு முதலாளிகள் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஊழியர்களைத் தருவிக்கலாம் என்று டாக்டர் டான் தெரிவித்தார்.
இருந்தாலும் கொவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளைச் சேர்ந்த புதிய வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு வர விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள் கொஞ்ச காலத்திற்குத் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டு உள்ள துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பு கொண்டு இருக்கும் என்றும் மேலும் உதவி தேவையா என்பதை அது தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வரும் என்றும் அவர் கூறினார்.
இப்போது உள்ள வெளிநாட்டு ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளும்படியும் சிங்கப்பூரில் ஏற்கெனவே இருக்கும் இதர ஊழியர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூறப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.