கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிப்பு
இந்தியாவின் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் என்று கருதப்படுவதால் மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் ஓடும் கங்கை நதியில் கால்நடைகளை மேய்ப்பதற்காக காலையில் அழைத்துச்சென்ற அந்தக் கிராம மக்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மிதந்தன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில், பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாதவர்கள் இறந்துபோகும் பட்சத்தில் அவர்களது உடல்களை உறவினர்கள் கங்கை நதியில் வீசி விடுகின்றனர் எனக் கூறப்படுகிறது.
எங்கிருந்து இந்த சடலங்கள் வீசப்பட்டன; இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பால் மேலும் கொரோனா பரவல் அதிகரிக்குமா உள்ளிட்ட கேள்விகள் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளன.