சிங்கப்பூரில் 26 பேரை மீண்டும் தீண்டிய கொரோனா
கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டபின் மீண்டும் அதனால் பாதிக்கப்பட்டதாக இம்மாதம் 10ஆம் தேதிவரை 26 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அமைச்சர் கான் கிம் யோங் இன்று தெரிவித்தார்.
அதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், நாள்கள் செல்லச் செல்ல நோய் எதிர்ப்பாற்றல் குறைவது அல்லது உருமாறிய கிருமி போன்ற காரணங்களால் மறுதொற்றுக்கு ஆளாகின்றனரா என ஆராயப்பட்டு வருவதாக திரு கான் கூறினார்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பத்து வெவ்வேறு உருமாறிய கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், அதிகமாகப் பரவும் தன்மை, நோயின் தீவிரத்தன்மை, தடுப்பூசியை எதிர்க்கும் ஆற்றல் ஆகிய காரணங்களால் பி16172 போன்ற சிலவகை உருமாறிய கிருமிகள் அதிக கவலையளிப்பதாக உள்ளது திரு கான் சொன்னார்.
டான் டோக் செங் மருத்துவமனையிலும் துவாஸ் சௌத் சமூகப் பராமரிப்பிடத்திலும் கிருமித்தொற்றுக் குழுமம் உருவானதற்கு பி16172 கிருமியே காரணம் என நம்பப்படுகிறது.