கிருமித்தொற்றை விரைவாக கண்டுபிடித்து பரவலைத் தடுக்க நடவடிக்கை: வழக்கமான சோதனையுடன் உடனடி சோதனையும் அமல்
சிங்கப்பூரில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து உறுதிப்படுத்த பிசிஆர் என்ற பரிசோதனை நடத்தப்படுகிறது. ஒருவரின் மூக்கு திரவத்தை பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்துச் சென்று அங்கு இந்தச் சோதனை நடத்தப்படும்.
பிசிஆர் பரிசோதனைதான் ஆக நம்பிக்கைமிக்கது என்றாலும் அதற்கு மணிக்கணக்கில் நேரம் பிடிக்கும். பதிலாக ஏஆர்டி என்ற பரிசோதனை மூலம் 30 நிமிடங்களில் அதே இடத்தில் முடிவைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பிசிஆர் பரிசோதனையை நம்பும் அளவுக்கு இதை நம்ப முடியாது.
இப்போது கடுமையான சுவாசக் கோளாறு அறிகுறிகள் இருப்போருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதோடு அவர்களுக்கு இனி ஏஆர்டி பரிசோதனையும் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (மே 14) அறிவித்தார்.
யாருக்காவது கிருமி தொற்றி இருந்தால் அவரை விரைவாக அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து அவரிடம் இருந்து கிருமி பரவுவதைத் தடுப்பது இதன் நோக்கம் என்றாரவர்.
கொவிட்-19ஐக் கையாள அமைக்கப்பட்டு உள்ள பல அமைச்சுகளை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழு இன்று மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. அதில் அமைச்சர் பேசினார்.
கடுமையான சுவாசக் கோளாறு களுடன் பலதுறை மருந்தகங்கள், அவசர சிகிச்சை துறைகள், வட்டார கொவிட்-19 பரிசோதனை நிலையங்கள் ஆகியவற்றுக்கும் மூக்கு திரவ பரிசோதனை செய்து கொண்டு வீட்டுக்குச் செல்லும் பொது சுகாதார ஆயத்த மருந்தகங் களுக்கும் செல்வோருக்கு ஏஆர்டி பரிசோதனை நடத்தப்படும். பிசிஆர் பரிசோதனை தேவைப்படும் எல்லா நோயாளிக்கும் அந்தச் சோதனையுடன் ஏஆர்டி பரிசோதனையும் நடத்தப்படும்.
சுவாசப் பிரச்சினைகளுடன் கூடிய அனைவருக்கும் இந்த இரண்டு பரிசோதனைகளுக்கும் ஆகும் செலவை அரசாங்கம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏஆர்டி சோதனை செய்துகொண்டோர் பிசிஆர் பரிசோதனையையும் செய்துகொள்ளவேண்டும்.
ஏஆர்டி பரிசோதனை மூலம் தடம் அறிவது, தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவது ஆகியவற்றை வேகமாகச் செய்ய முடியும்.
இருந்தாலும் அறிகுறிகளுடன் கூடியவர்கள் உடனடியாக பரிசோதனைக்கு வருவதைப் பொறுத்தே இது இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக், பரிசோதனை ஆற்றலை, தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை விரிவுபடுத்துவதன் தொடர்பில் பரிசோதனைக்கூடங்களுடன் சுகாதார அமைச்சு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.