புளோக் 506 ஹவ்காங் அவென்யூ 8ல் 10 பேருக்கு கிருமித்தொற்று
ஹவ்காங் அவென்யூ 8ல் இருக்கும் புளோக் 506ல் வசிக்கும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்குத் தொற்று இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தப் புளோக்வாசிகளுக்கு நடத்தப்பட்ட கட்டாய பரிசோதனைகள் மூலம் அவர்களில் ஒருவருக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹவ்காங் புளோக்கில் நேற்று முன்தினமும் நேற்றும் 407 பேருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
மேலும் 126 பரிசோதனை முடிவுகள் இனிமேல்தான் வரவேண்டும் என்றும் அவை கூறின.
கிருமி தொற்றியதாகக் கண்டறியப்பட்ட 10 பேரில் பெரும்பாலானவர்கள் தனிமையில் இருந்தவர்கள். அவர்களுக்குத் தொற்று இருந்தது பின்னர் தெரியவந்தது.
அதாவது முன்னதாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்கள். தொற்றுடன் அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்று அமைச்சுகள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட நான்கு வீடுகளும் ஒன்றுக்கொன்று மேலே அல்லது கீழே, அருகே இருக்கும் வீடுகள் என்றாலும் காற்று மூலம் வேறு யாருக்கும் கிருமி பரவி இருக்கக்கூடிய வாய்ப்பு அநேகமாக அறவே இல்லை என்பது தொடக்க மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டறிய புலன்விசாரணை நடந்து வருகிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் நகர மன்றத்துடன் சேர்ந்து துப்புரவு நடைமுறைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
அதேநேரத்தில், கூடுமானவரை கண்காணிப்புகளை அதிகப்படுத்தி பாதிக்கப்பட்ட புளோக்கில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
இந்த ஹவ்காங் புளோக் மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ள வீவக புளோக் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.