அமைச்சர்: கொவிட்-19 தொடர்ந்து நீடிக்கும் சாத்தியத்திற்கு திட்டமிடும் சிங்கப்பூர்
கொவிட்-19 தொற்று இங்கு ஒரு தொற்றுநோயாகத் தொடரக்கூடிய சாத்தியம் இருப்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப சிங்கப்பூர் திட்டமிடத் தொடங்கி இருக்கிறது என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அதாவது, சிங்கப்பூரர்கள் அப்போதைக்கு அப்போது தடுப்பூசி போட்டுக்கொண்டு நோய்த்தடுப்பு ஆற்றலை அதிகரித்துக்கொள்ள வேண்டி இருக்கும். பயம் குறையும் வகையில் கொவிட்-19க்கு வரும் மாதங்களில் இன்னும் சிறந்த சிகிச்சை கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது என்று இன்று (மே 28) மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்தார்.
அப்போதும்கூட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுக்க வேண்டிய தேவை இருக்கும் என்று கூறிய திரு வோங், கிருமி தொற்றுவதைக் குறைக்கும் வகையில் கட்டடங்களில் காற்றோட்ட வசதிகளை எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்றை, இங்கு நிலை பெற்றுவிட்ட ஒரு தொற்றுநோயாக எப்போது கருது வது என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அதை தம்மால் சொல்ல இயலவில்லை என்று அமைச்சர் கூறினார்.
இருந்தாலும் உலகம் முழுவதையும சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்து வருவதை கவனத்தில் கொண்டு சிங்கப்பூர் பலவற்றுக்கும் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமியை அறவே துடைத்து ஒழிப்பது சாத்தியமாகாமல் போகலாம். அந்தக் கிருமி ஒருபோதும் ஒழியாமல் போகலாம். எனவே, அதோடு வாழ நாம் கற்றுக்கொள்ளவேண்டி இருக்கும் என்ற முடிவை உலகம் முழுவதும் அறிவியல் வல்லுநர்கள் நெருங்கும் சாத்தியத்திற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக திரு வோங் சொன்னார்.