அமைச்சர்: போதுமான அளவு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் உள்ளன, தேவையானவற்றை மட்டும் வாங்கவும்
சிங்கப்பூரில் போதுமான அளவு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் உள்ளன. எனவே, தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் மக்கள் வாங்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
இதன் தொடர்பில் இன்று (மே 31) நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தொடர்வதை உறுதிசெய்ய மலேசியாவுடன் சேர்ந்து சிங்கப்பூர் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
மலேசியாவில் நாளை (ஜூன் 1) தொடங்கி இரு வாரங்களுக்கு முழு முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படும்.
கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்கு இணைத் தலைவரான திரு கான், சிங்கப்பூரிடம் இருப்பில் உள்ள பொருள்களை அதிகரிக்கவும் உணவு, அத்தியாவசிப் பொருள்களை மேலும் பல்வகைப்படுத்தவும், அதே வேளையில் உள்ளூர் தயாரிப்பை அதிகரிக்கவும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து அரசாங்கம் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் அத்தியாவசியப் பொருள், சேவைகளைக் கையாளும் நிறுவனங்களுடன் சேர்ந்து பொருளியல் அமைப்புகள் பணியாற்றி வருவதாகவும் திரு கான் கூறினார்.
“உலகளவில் கொவிட்-19 கொள்ளைநோய் பரவிவரும் சூழலில், ஒரு தேசமாக நாம் தொடர்ந்து தயார்நிலையிலும் விழிப்புடனும் இருக்க வேண்டும். அதே வேளையில், நீக்குப்போக்குடனும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் செயல்படவும் வேண்டும்,” என்று அவர் சொன்னார்.
இந்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீது மிதமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திரு கான் தெரிவித்தார். ஒவ்வொரு துறை மீதான பாதிப்பு வேறுபட்டிருக்கும் என்றார் அவர்.