சுயபரிசோதனைக் கருவி: கட்டுமானத் தளங்களில் முன்னோட்டம்
பணியிடங்களில் கொவிட்-19 தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் விதமாக, ‘ஏஆர்டி’ எனப்படும் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை முறை கட்டுமானத் தளங்களில், தங்கு விடுதிகளில் வசிக்காத ஊழியர்களிடம் முன்னோட்ட முறையில் சோதித்துப் பார்க்கப்படவுள்ளது.
பொதுவாக, மூன்று நாள்களுக்கு ஒருமுறை இடம்பெறும் இச்சோதனையை, ‘சுயபரிசோதனைக் கருவி’ மூலமாக ஊழியர்கள் தாங்களாகவே செய்து கொள்வர் என்று கட்டட, கட்டுமான ஆணையம் நேற்று (மே 31) தெரிவித்தது.
ஆயினும், அட்டவணைப்படி வழக்கமாகச் செய்யப்படும் ‘பிசிஆர்’ பரிசோதனைக்கும் அந்த ஊழியர்கள் உட்பட வேண்டும்.
இந்த முன்னோட்டச் சோதனைத் திட்டத்தின்கீழ், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள், அட்டவணைப்படி 14 நாள்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருந்தால், மூன்று நாள்களுக்கு ஒருமுறை ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்து கொள்வர். அட்டவணைப்படி ஏழு நாள்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருப்போர், வாரம் ஒரு முறை ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள், தங்களது அபாய நிலையைப் பொறுத்து, வாரத்திற்கு அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ‘ஏஆர்டி’ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த ‘ஏஆர்டி’ பரிசோதனை முன்னோட்டத் திட்டத்தைக் கட்டட, கட்டுமான ஆணையமும் மனிதவள அமைச்சும் மேற்பார்வையிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.