மூன்று புளோக்குகளில் கொரோனா பரிசோதனை தொடங்கியது
ஹவ்காங்கில் இரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளிலும் ஈசூனில் ஒரு புளோக்கிலும் இன்று (ஜூன் 1) கட்டாய கொவிட்-19 பரிசோதனை தொடங்கியது.
ஹவ்காங் அவென்யூ 8ல் 501, 5017, ஈசூன் ஸ்திரீட் 72ல் 745 ஆகிய மூன்று புளோக்குகளில் வசிப்போர் அனைவரும் கட்டாயமாக எச்சில்/சளி மாதிரிப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
ஈசூன் புளோக் 745 குடியிருப்பாளர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கண்காணிப்புச் சோதனைகளில், இரு வீடுகளைச் சேர்ந்த அறுவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், கழிவுநீர்ச் சோதனையில் கொவிட்-19 கிருமித் துணுக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த புளோக்வாசிகளுக்குக் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அறுவரையும் எப்படி, எங்கிருந்து கிருமி தொற்றியது என்பது ஆராயப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஹவ்காங் புளோக் 501 மற்றும் 507ல் சேகரிக்கப்பட்ட கழிவுநீரைச் சோதித்தபோது, அதிலும் கொவிட்-19 கிருமித் துணுக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விரு இடங்களிலும் இன்று காலை 9 மணியிலிருந்து கட்டாய கொரோனா பரிசோதனை தொடங்கியது.