கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி ஜூன் 16 முதல் சில மருந்தகங்களில் விற்பனை
இம்மாதம் 16ஆம் தேதியில் இருந்து கார்டியன், யூனிட்டி, வாட்சன்ஸ் ஆகிய மருந்தகங்களில் கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி விற்பனைக்கு வரும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
“அதிகமான நடவடிக்கைகளை நாம் மீண்டும் தொடங்க விரும்புவதால், கொரோனா பரிசோதனையை விரைந்தும் எளிதிலும் அனைவர்க்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டியுள்ளது,” என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இன்று (ஜூன் 10) தெரிவித்தார்.
அனைவர்க்கும் போதுமான அளவில் விநியோகம் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக, தொடக்கத்தில் ஒருவர்க்கு அதிகபட்சம் 10 ஆன்டிஜன் விரைவுச் சோதனை (ஏஆர்டி) கருவிகள் மட்டுமே விற்கப்படும்.
படிப்படியாக அவை அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
‘ஏஆர்டி’ பரிசோதனைக் கருவியை எளிதாகவும் சுயமாகவும் பயன்படுத்த முடியும் என்றும் அதன்மூலம் 20 நிமிடங்களுக்குள் முடிவைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.