அபாயம் மிகுந்த பணியிடங்களில் கட்டாய கொவிட்-19 பரிசோதனை
முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுடன் அதிக அபாயம் உள்ள சூழல்களில் வேலை செய்வோர் அவ்வப்போது கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு, இந்தப் பரிசோதனைகளுக்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட உணவு, பான நிலையங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், உடற்தகுதி நிலையங்கள் ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.
இம்மாதம் 21ஆம் தேதியில் இருந்து அதிகபட்சம் ஐவர், குழுவாக அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படுவர் என்பதால் ஜூலை மாதம் முதல் உணவு, பான நிலையங்களில் பணிபுரிவோர்க்குக் கட்டாய விரைவு, எளிய பரிசோதனை (எஃப்இடி) நடைமுறை தொடங்கும்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இன்றைய (ஜூன் 10) செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விரிவுபடுத்தப்பட்ட பரிசோதனை நடைமுறை குறித்து அறிவிக்கப்பட்டது.