சமூகத்தில் 15 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 18 பேருக்கு கிருமித்தொற்று
சமூக அளவில் 15 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 22) புதிதாக 18 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் தொற்று உறுதியான அந்த 15 பேரில் ஐவருக்கு முன்னதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனான தொடர்பு கண்டறியப்படவில்லை.
வெளிநாட்டு ஊழியர் விடுதியில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,448 ஆக உள்ளது.
இதற்கிடையே, கிருமித்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக 44 வயது ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று இரவு தெரிவித்தது.
அவரையும் சேர்த்து, சிங்கப்பூரில் தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
மே 25ஆம் தேதி அந்த ஆடவர் அலெக்சாண்டிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாள் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
“அவர் கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, அவருக்கு நீரிழிவுப் பிரச்சினை இருந்தது,” என்று அமைச்சு விவரித்தது.
அந்த ஆடவரின் குடும்பத்தாரை அலெக்சாண்டிரா மருத்துவமனை தொடர்புகொண்டுள்ளதாகவும் அவர்களுக்கு உதவி வழங்கி வருவதாகவும் அமைச்சு கூறியது.