கொவிட்-19 விதிமீறலைக் கண்டுபிடிக்க தீவிர சோதனை; லிட்டில் இந்தியாவில் நடவடிக்கை, அபராதம்
கொவிட்-19 விதிமுறைகள் அண்மையில் தளர்த்தப்பட்ட பின்னர் உணவகங்களில் இருவராக உண்ணும் அனுமதி கிடைத்து அது நடப்பில் உள்ளது.
தீவின் வெவ்வேறு பகுதிகளில் மீண்டும் வாடிக்கையாளர்களை உணவகங்கள் வரவேற்று வரும் அதேவேளை, சமூக இடைவெளி, பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்பதற்கான சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிறன்று (ஜூன் 27) லிட்டில் இந்தியாவில் அதுபோன்ற சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ஈடுபட்ட சிங்கப்பூர் பயணத்துறைக் கழக அமலாக்க அதிகாரிகளை இரண்டு மணி நேரமாக பின்தொடர்ந்தது தமிழ் முரசு செய்திக்குழு.
சமூக இடைவெளித் தூதர்கள் கொவிட்-19 கட்டுப்பாட்டு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு ஆலோசனை மட்டுமே கூறமுடியும். ஆனால், விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் அமலாக்க அதிகாரிகளுக்கு உண்டு.
ஒவ்வோர் இடமாகச் சென்ற அதிகாரிகள் கேம்பல் லேன் பகுதியில் முகக்கவசத்தை மூக்கின் கீழ் அணிந்திருந்த இளையர் ஒருவருக்கு அபராதம் விதித்தனர்.
அதனைத் தொடர்ந்து சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள கடைகளிலும் உணவகங்களிலும் தீடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உணவகங்களில் சாப்பாட்டுக்குக் காத்திருக்கும் நேரத்தில் முகக்கவசம் அணியுமாறு வாடிக்கையாளர்களுக்கு அமலாக்க அதிகாரிகள் நினைவூட்டினர்.
ஓர் உணவகத்தின் சமையல் அறையில் முகக்கவசம் அணியாத குற்றத்திற்காக ஊழியர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதே உணவகத்தில் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் உணவகத்தினுள் நுழைய வரிசையில் நின்றனர்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு கொடுத்த தகவல்படி, இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில், சமூக இடைவெளி, பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 600 தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்களில் 350க்கும் மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணியாததற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள்.
கடந்த வாரத்தின் நிலவரப்படி, கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றாததால் 16 உணவு, பானக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிராங்கூன் சாலையிலுள்ள கோமள விலாஸ் உணவகமும் அந்தப் பட்டியலில் அடங்கும்.
இந்நிலையில், கோமள விலாஸ் உணவகத்தின் இயக்குநர் திரு ராஜகுமார் குணசேகரன், 35, தமிழ் முரசிடம் பேசினார்.
“நடவடிக்கை காரணமாக கடையினுள் அமர்ந்து உண்ணுவது கோமள விலாஸ் உணவகத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
“நேரில் வந்து வாங்கிச் செல்வோருக்கும் விநியோகம் செய்யு மாறு ‘ஆர்டர்’ தருவோருக்கும் தொடர்ந்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) முதல் உணவகம் வழக்கம்போல இயங்கும்.
“இந்த சிரமமான காலகட்டத்தில் கொவிட்-19 விதிமுறைகளை கடைப்பிடித்து வாடிக்கையாளர்கள் உதவவேண்டும். எங்களது ஊழியர்களும் விதிகளைச் சரிவரப் பின்பற்றுவார்கள்.
“வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் விதிகளுக்குக் கட்டுப்பட்டாலும் அலட்சியம் செய்வோரும் சிலர் உள்ளனர். இருப்பினும் விதிகளைப் பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.