இரு சந்தைகளுக்குச் சென்றோருக்கு இலவச கொவிட்-19 சுயப் பரிசோதனை சாதனம்
கடந்த 14 நாட்களில் அட்மிரல்டி ஈரச்சந்தைக்கும் புக்கிட் தீமா ஈரச்சந்தை, உணவு நிலையத்துக்கும் சென்றவர்களுக்குச் சுயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள உதவும் சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணவும் மேலும் பலருக்கு கொவிட்-19 கிருமி பரவுவதைத் தடுக்கவும் மக்கள் கழகத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு சுயப் பரிசோதனை சாதனங்களை விநியோகித்து வருகிறது.
அட்மிரல்டி ஈரச்சந்தைக்கும் புக்கிட் தீமா ஈரச்சந்தை, உணவு நிலையத்துக்கும் அருகில் உள்ள குடியிருப்பாளர் குழு நிலையங்களிலிருந்து சுயப் பரிசோதனை சாதனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சுயப் பரிசோதனை சாதனத்துக்கான விநியோகம் இன்று தொடங்கி நாளை நிறைவடைகிறது. நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் 26 கொவிட்-19 குழுமங்கள் உள்ளன. ஒவ்வொரு குழுமத்திலும் மூன்றிலிருந்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.