தடுப்பூசி போட்டுக்கொண்டும் கூடுதலானோரை கொவிட்-19 தொற்ற காரணம் என்ன?
சிங்கப்பூரில் தற்போதைய சூழலில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாவோரில் 44 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். கொரோனா கிருமிக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதில் தடுப்பூசி செயல்திறனுடையதாக உள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும், சிங்கப்பூரில் தொடர்ந்து கூடுதலானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வரும் வேளையில், தடுப்பூசி போட்டுக்கொண்டோரையும் கிருமி தொற்றுவதற்கான சாத்தியம் கூடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக, தடுப்பூசிகளின் ஆற்றலை இது பிரதிபலிப்பதில்லை என்பது அவர்களது கருத்து.
குறிப்பிடும்படியாக, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரைக் கிருமி தொற்றினாலும் அவருக்குக் கடுமையான நோய்ப் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு.
அதே வேளையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் கிருமித்தொற்றுக்கு ஆளானால், அவர்களுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் குறைவானவர்களுக்கே உயிர்வாயு ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படுதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் மருத்துவரான பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறுகிறார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி விகிதம் அதிகரித்து இருப்பதே இதற்குக் காரணம் என்றார் அவர். எனவே மேலும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடும் முயற்சியைத் தொடர வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.