பெருகிவரும் கொவிட்-19 தொற்றுக் குழுமங்கள் பற்றி பீஷான் பேருந்து சந்திப்பு நிலைய ஊழியர்களுக்கு கவலை
தங்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு தங்களது அன்புக்குரியவர்களுக்கும் கிருமியைப் பரப்பிவிடுவோமோ என்பது பற்றி பீஷான் பேருந்து சந்திப்பு நிலையத்தில் உள்ள பேருந்து ஓட்டுநர்களும் முகப்பு ஊழியர்களும் கவலைப்படுவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) உதவித் தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் கூறியுள்ளார்.
இதன் தொடர்பில் இன்று (செப்டம்பர் 3) அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், தாங்கள் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டால் தங்களது அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படுமோ என்பது பற்றி ஊழியர்களில் சிலர் கவலைப்படுவதாகவும் திரு யோங் தெரிவித்தார். மற்ற சிலர், தங்களது பணி அட்டவணையில் ஏற்படுத்தப்படும் தொடர் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வருகின்றனர்.
இங்குள்ள பல்வேறு பேருந்து சந்திப்பு நிலையங்களில் கொவிட்-19 தொற்றுக் குழுமங்கள் உருவெடுத்திருப்பதைத் தொடர்ந்து, பீஷான் பேருந்து சந்திப்பு நிலையத்திற்கு இன்று (செப்டம்பர் 3) பிற்பகல் வருகையளித்த திரு யோங் இதனைத் தெரிவித்தார்.
“பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து, வேறொரு தங்குமிடத்தைத் தேடிக்கொள்ளுமாறு வீட்டு உரிமையார் அவரிடம் கூறியதாக எனக்குத் தெரியப்படுத்தப்பட்டது. தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகத்தினர் உடனடி ஏற்பாடுகளின் பலனாக அந்தப் பேருந்து ஓட்டுநருக்கு புதிய தங்குமிடம் தேடித் தரப்பட்டது,” என்றார் திரு யோங்.
தங்களது சக பணியாளர்களுக்குத் தொற்று உறுதியானது குறித்து பல ஊழியர்கள் கவலைப்படுவதையும் அவர் சுட்டினார்.
“இதுவரை, தொற்றுக்கு ஆளான பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிகுறிகள் இல்லை அல்லது இலேசான அறிகுறிகளே உள்ளன. நமது முன்களப் பேருந்து ஓட்டுநர்களிடையே தடுப்பூசி விகிதம் 95 விழுக்காட்டை எட்டியுள்ளதே இதற்குக் காரணமாக இருக்கலாம்,” என்று திரு யோங் விவரித்தார்.